எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஃபோ ஃபாங் சியாகட்டுரைகள்

எதிர்பாராத விருந்தினர்

சாக் ஒரு தனிமையான ஆள். அவன் நகர வீதிகளில் நடந்து செல்லும்போது அவனை எதிர்க்கின்ற இரைச்சலை உணர்ந்தான். ஆனால் பிறகு அவனுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அலெக்ஸாந்திரியாவிலுள்ள கிளெமண்ட் என்ற திருச்சபை தலைவர், “சாக் ஒரு முக்கியமான கிறிஸ்தவத் தலைவரும், சிசெரியாவில் ஒரு சபையின் போதகருமானார்” என்றார். ஆம், இயேசுவைப் பார்க்க வேணடுமென்று காட்டத்தி மரத்தில் ஏறின, வரி வசூலிக்கும் சகேயுவைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் (லூக்கா 19:1-10).

மரத்தில் ஏறுவதற்கு எது அவரைத் தூண்டியது? வரி வசூலிப்பவர்கள் துரோகிகளாகக் கருதப்பட்டனர். ஏனென்றால் ரோம அரசாங்கத்திற்கு சேவை செய்ய தங்கள் சொந்த மக்களிடமே மிக அதிகமாக இவர்கள் வரி வசூலித்தனர். அவர்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நற்பண்பு இயேசுவிடம் இருந்தது. தன்னையும் இயேசு ஏற்றுக்கொள்வாரா என்று சகேயு நினைத்திருக்கக் கூடும். அவன் குள்ளனாயிருந்தப்படியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியவில்லை (லூக்கா 19:3). ஒருவேளை இயேசுவைப் பார்க்க அவன் காட்டத்தி மரத்தில் ஏறியிருக்கலாம். 

இயேசுவும் சகேயுவைத் தேடிக்கொண்டிருந்தார். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துப் பார்த்து, அவனைக் கண்டு “சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும்” என்றார் (வச. 5). இப்படி தள்ளப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு விருந்தினராகப் போவது மிகவும் அவசியம் என்று இயேசு எண்ணினார். கற்பனை செய்துப் பாருங்கள்! உலகத்தின் இரட்சகர் இயேசு, சமுதாயத்தில் தள்ளப்பட்டவருடன் நேரம் செலவிட விரும்பினார். 

ஒருவேளை நம்முடைய இருதயம், உறவுகள், அல்லது வாழ்க்கை சீர்படவேண்டுமோ, சகேயுவைப் போல நமக்கும் நம்பிக்கை உண்டு. நாம் அவரிடத்தில் திரும்பும்போது இயேசு ஒருபோதும் நம்மை புறக்கணிக்கமாட்டார். உடைந்ததையும், இழந்ததையும் அவர் திரும்பத் தந்து, நம்முடைய வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுப்பார். 

கர்த்தருடைய நடத்துதல்

குறிப்பிட்ட ஒரு கிராமத்திலிருந்து நாங்கள் துணிகரமாய் காட்டுக்குள் வெகுதூரம் பயணம் மேற்கொண்டோம். சில மாதங்கள் கடந்தபின், தண்ணீரின் மெல்லிய ஓசை எங்கள் காதுகளில் தொனித்தது. வேகமாய் நடக்கத் தொடங்கின எங்களை விரைவில் கருத்த மலைகளுக்கு இடையிலிருந்த வெண்மையான நீரோட்டம் வரவேற்றது. மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு காட்சி!

நாங்கள் அந்த இன்பச் சுற்றுலாவை அனுபவிக்க எண்ணி, எங்களுடைய பயணத்திற்கு துணைபுரிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலரை நாங்கள் திருப்பி அனுப்பிவிட்டோம். நல்ல திட்டம் தான். ஆனால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது? நாங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. என்னுடைய நண்பர்கள் அருகிலிருந்த காட்டுக்குள் சென்று சில பழங்கள், காய்கறிகள், மீன்கள் என்று சேகரித்து வந்தனர். அந்த ஆகாரம் எங்களுக்கு புதிதாயிருந்தது. ஆனால் மிக சுவையாய் தெரிந்தது. 

தேவனுடைய சிரு~;டிப்பில் நம் தேவைகள் அளவுக்கு அதிகமாய் இறைந்து கிடக்கிறது. அதற்கு ஆதாரமாய், “பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது” (ஆதியாகமம் 1:12) என்பதை எடுத்துக்கொள்ளலாம். “விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும்” (வச. 29) உண்டாக்கி, அவைகளை தேவன் நமக்கு ஆகாரமாய் கொடுத்திருக்கிறார். 

உன் தேவைகளுக்காய் தேவனை நம்புவது சிலவேளைகளில் கடினமாய் தோன்றுகிறதா? நீங்கள் இயற்கையை ரசிக்கும் ஒர் நடைபயணம் மேற்கொள்ளலாமே? உங்கள் பார்வையில் தென்படுவது இயேசுவின் உறுதியான வார்த்தைகளை நினைவுபடுத்தட்டும்: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை  உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம்  அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” (மத்தேயு 6:31-32).

யாருக்கு தெரியும்?

சீன பாரம்பரிய கதைகளின்படி, ஒரு மனிதர் தன்னுடைய விலை உயர்ந்த குதிரைகளில் ஒன்றை தொலைத்துவிட்டார், அவருடைய அந்த இழப்பிற்கு அண்டைவீட்டார் வருத்தத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்த மனிதருக்கு பெரிதாக அக்கறை இல்லை. யாருக்கு தெரியும் இது எனக்கு நல்லதாக கூட இருக்கலாம்? என்றார் அவர். ஆச்சர்யமாக, தொலைந்த குதிரை வீடு திரும்பும்போது, தன்னுடன் வேறொரு குதிரையுடன் திரும்பியது. அதற்கு அண்டைவீட்டார் அவரை வாழ்த்தினார், அதற்கு அவர் யாருக்கு தெரியும் இது எனக்கு கெட்டதாககூட இருக்கலாம்? என்றார். அதற்கு ஏற்ற போலவே அவருடைய மகன் புதிய குதிரையின்மீது சவாரி செய்யும் போது கீழே விழுந்து காலை உடைத்து கொண்டான். ராணுவத்திலிருந்து ஆட்கள் அந்த கிராமத்திற்கு வந்து உடல் தகுதியான அனைத்து ஆண்களையும் போரில் சண்டையிட ஆள் சேர்க்க ஆரம்பிக்கும் வரை இது ஒரு துரதிருஷ்டம் போல தோன்றியது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருடைய மகன் சேர்க்கப்படவில்லை. அதுவே அவனுடைய உயிரை மரணத்திலிருந்து பாதுகாத்தது.

அதிர்ஷ்டத்தில் கஷ்டங்களும் ஆசீர்வாதமாக இருக்கும் மற்றும் நேர்எதிராகவும் இருக்கும் என்பதை போதிக்கும் சீன பழமொழிக்கு பின்னால் உள்ள கதை இதுதான். இந்த பண்டைய ஞானம் பிரசங்கி 6:12 உடன் நெருங்கிய இணைப்பு கொண்டது. அதில் அதன் ஆசிரியர்: ஒரு நபரின் வாழ்க்கைக்கு எது நல்லதென்று யாருக்கு தெரியும்? எதிர்காலம் என்ன வைத்திருக்கிறதென்று உண்மையில் நம் யாருக்கும் தெரியாது. துன்பத்தில் கண்டிப்பாக நல்ல பலன்களும் உண்டு, செழிப்பில் கண்டிப்பாக தீய விளைவுகளும் உண்டு, என்பதை கவனிக்கிறார்.

ஒவ்வொரு நாளும் புதிய சந்தர்ப்பங்களை, மகிழ்ச்சிகளை மற்றும் வேதனைகளை அளிக்கிறது. தேவனுடைய அன்புக்குரிய பிள்ளைகளாக நாம் அவருடைய இறையாண்மையில் இளைப்பாறலாம், நல்ல மற்றும் மோசமான நேரங்களிலும் நாம் அவரை நம்பலாம், “தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்” (7:14).  நம் வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் அவர் நம்முடன் இருக்கிறார் மற்றும் அவருடைய அன்புள்ள அக்கறையை நமக்கு வாக்குப்பண்ணி இருக்கிறார்.

அந்தக் கணங்களை பொக்கிஷமாகச் சேகரித்து வையுங்கள்

சூ டாங்க்போ என்பவர் சீனாவிலுள்ள மிகப் பெரிய கவிஞரும், கட்டுரை எழுதுபவரும் ஆவார். அவர் நாடு கடத்தப்பட்டிருந்த போது, முழு நிலவைப் பார்த்த போது, தன்னுடைய சகோதரனை நினைத்து, ஒரு பாடல் எழுதினார். “நாம் மகிழ்ச்சியடைகின்றோம் வருத்தப்படுகின்றோம், சேகரிக்கின்றோம் விட்டுவிடுகின்றோம், அப்படியே நிலாவும் வளர்கின்றது, தேய்கின்றது. காலம் செல்லும் போது, எதுவுமே நேர்த்தியாக இருப்பதில்லை” என்று எழுதினார். “நாம் நேசிப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்களாக, இந்த அழகிய காட்சியை நாம் இருவரும், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், ரசிக்கின்றோம்” என்று எழுதினார்.

அவர் எழுதிய இப்பாடலின் கருத்தை நாம் பிரசங்கி புத்தகத்தில் காண்கின்றோம். போதகர் என்று அழைக்கப்படும் அதன் ஆசிரியர் (1:1), “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு,………………..தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு (வ.3:4-5) என்பதைக் காண்கின்றார். இரண்டு எதிர் எதிரான காரியங்களை இணைத்துக் கூறும் ஆசிரியர், சீன கவிஞரைப் போன்று, எல்லா நல்ல காரியங்களும் கண்டிப்பாக ஒரு முடிவிற்கு வரும் என்று கூறுகின்றார்.

இவ்வுலகில் எதுவுமே நிலையானது அல்ல, என்பதற்கு அடையாளம், தேய்பிறை மற்றும் வளர் பிறை என்கின்றார். தேவன் உருவாக்கிய இந்த உலகத்தில் அனைத்துப் படைப்புகளையும் தன் வார்த்தையால் உருவாக்கினார். தேவன் தான் படைத்த  யாவற்றையும் பார்க்கின்றார், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (வ.11).

வாழ்வில் எது நடக்கும் என்பதை நம்மால் கூறமுடியாது. சில வேளைகளில் வேதனை தரும் பிரிவுகளாலும் நிறையலாம். ஆனால் அனைத்துமே தேவனுடைய கண்காணிப்பில் தான் நடைபெறுகின்றது என்பதை மனதில் கொள்வோம். நம்முடைய வாழ்வை மகிழ்ச்சியோடு தொடர்வோம், அதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மற்றும் கெட்ட காரியங்களை பொக்கிஷமாக வைத்துக் கொள்வோம், ஏனெனில், நம்முடைய அன்பு தேவன் நம்மோடு இருக்கின்றார்.

மீட்கப்பட வேண்டும்

ஆல்டி என்ற வாலிபன் இந்தோனேஷியாவிலிருந்து 125 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 78 மைல்கள்) தொலைவிற்கு அப்பால், சுலவேசி என்ற தீவில் தன்னந்தனியாக, ஒரு மிதக்கும் மீன் பிடி குடிசையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, குடிசையைத் தாக்கிய வலிமையான காற்று, நங்கூரத்தோடு அக்குடிசையை கடலில் தூக்கி எறிந்தது. 49 நாட்கள் ஆல்டி சமுத்திரத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டான். ஒவ்வொரு முறை அவன் ஒரு கப்பலைப் பார்க்கும் போதும், தன்னுடைய விளக்கை ஏற்றி, மாலுமியின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தான், ஆனால் ஏமாற்றத்தைத் தான்    சந்தித்தான். நலிந்து காணப்பட்ட அந்த வாலிபன் மீட்கப் படும் முன்னர் ஏறத்தாள 10 கப்பல்கள் அவனைக் கடந்து சென்றன.

ஒரு நியாயசாஸ்திரியிடம் இயேசு, காப்பாற்றப் படவேண்டிய ஒரு மனிதனைக் குறித்த, ஓர் உவமையைச் சொன்னார் (லூக். 10:25).  இரண்டு மனிதர்கள் – ஓர் ஆசாரியனும், ஒரு லேவியனும் தங்களின் பிரயாணத்தின் போது காயப்பட்டு கிடந்த ஒரு மனிதனைக் காண்கின்றனர். அவனுக்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் “பக்கமாய் விலகிப் போயினர்” (வ. 31-32). ஏன் அவ்வாறு சென்றனர் என்பதற்கான காரணம் கூறப்படவில்லை. இருவருமே மதப்பற்றுடையவர்கள், எனவே நிச்சயமாக, பிறனை நேசி என்ற தேவனுடைய கட்டளையை அறிந்திருக்க வேண்டும் (லேவி.19:17-18). ஆனால், அவர்கள் அதனை மிகவும் ஆபத்தானது என்று கருதியிருக்கலாம், அல்லது  மரித்துப்போன உடலைத் தொடுவதன் மூலம்,  தீட்டுப்பட்டவர்கள் ஆலயத்தில் பணிசெய்யக் கூடாது என்ற யூத சட்டத்தை மீற நேரிடும் என்று எண்ணியிருக்கலாம். ஆனால் இதற்கு மாறாக யூதர்கள், இழிவாகக் கருதும் சமாரியன் ஒருவன் உயர்ந்த காரியத்தைச் செய்கின்றான். அவன் தேவையிலிருக்கும் அந்த மனிதனைப் பார்க்கின்றான்,  தன்னலமின்றி அவனைப் பாதுகாக்கின்றான்.

இயேசு, தன்னைப் பின்பற்றுகின்றவர்களிடம் “நீயும் போய்         அந்தப்படியே செய்” (லூக்.10:37) என்கின்ற கட்டளையோடு தன்னுடைய போதனையை முடிக்கின்றார். பிறருக்கு உதவி செய்வதில் கஷ்டங்கள் இருந்தாலும், அன்போடும் முழுமனத்தோடும் உதவி செய்ய தேவன் நமக்கு உதவி செய்வாராக.

சந்தேகமும் விசுவாசமும்

மேத்யூ கடுமையான தலை வலியினால் விழித்துக் கொண்டான், இது ஒரு வகை ஒற்றைத் தலைவலியாக இருக்கும் என எண்ணினான். ஆனால் அவன் படுக்கையை விட்டு எழுந்ததும் தரையில் சரிந்தான். அவன் ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட போது, மருத்துவர்கள் அவனை பக்க வாதம் தாக்கி இருக்கிறது என்றனர், மறுவாழ்வு மையத்தில் நான்கு மாதங்கள் சிகிச்சை பெற்றபின்பு, அவர் சிந்திக்கும் மற்றும் பேசும் ஆற்றலைத் திரும்பப் பெற்றார், ஆனால் மூட்டு வலியோடு தான் நடக்க முடிகின்றது. விரக்தியினால் அடிக்கடி பாதிக்கப் பட்டாலும், யோபு புத்தகம் அவருக்கு மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது.

யோபு தன்னுடைய செல்வம் அனைத்தையும், தன்னுடைய பிள்ளைகளையும் ஒரே நாளில் இழ   ந்தான். இந்த அதிர்ச்சி தரும் செய்திகளின் மத்தியிலும், அவன் முதலாவது தேவனை நம்பிக்கையோடு பார்த்தான், அவரே எல்லாவற்றையும் தந்தவர் என்று அவரைத் துதித்தான். குழப்பத்தின் மத்தியிலும் சர்வ வல்ல தேவனைப் போற்றினான் (யோபு 1:21). அவனுடைய உறுதியான விசுவாசம் நம்மை வியக்கச் செய்கின்றது. ஆனாலும், யோபு விரக்தியோடு போராடினார். அவன் சுகவீனமான போது (2:7) தான் பிறந்த நாளைச் சபித்தான் (3:1). தன்னுடைய வேதனையிலும், அவன் தன் நண்பர்களோடும் தேவனோடும் உண்மையாய் இருந்தான். கடைசியாக, நன்மையும் தீமையும் தேவனுடைய கரத்திலிருந்து வருகின்றது என்பதை ஏற்றுக் கொண்டான் (13:15; 19:25-27).

நம்முடைய வேதனையின் மத்தியில், நாம் நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையேயும், சந்தேகத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையேயும் ஊசலாடிக் கொண்டிருக்கலாம். நம்முடைய துன்ப நேரத்தில் ஊக்கம் இழந்தவர்களாக அல்ல, நம்முடைய கேள்விகளோடு தேவனிடம் வரும்படி நம்மை அழைக்கின்றார். சில வேளைகளில் நம்முடைய விசுவாசம் குன்றிப் போனாலும், என்றும் உண்மையுள்ள தேவன் பேரில் நம்பிக்கையோடிருப்போம்.

தேவனைக் குறித்த பசி

இயேசுவைப் புதிதாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வேதாகமத்தை வாசிப்பதற்கு மிக ஆவலாக இருந்தார். ஆனால் அவர் தன் கண்பார்வையையும், இரண்டு கரங்களையும் ஒரு வெடி விபத்தில் இழந்தார். ஒரு பெண் தன்னுடைய உதடுகளின் உதவியால் பிரெயில் எழுத்துக்களை வாசிக்கின்றார் என்பதைக் கேள்விப்பட்ட போது, அவரும் அதனைச் செய்ய முயற்சித்தார், ஆனால் உதடுகளின் முனையிலுள்ள உணர்வு நரம்புகளும் செயல் இழந்து விட்டன என்பதை அப்பொழுது கண்டுபிடித்தார். கடைசியாக பிரெயில் எழுத்துக்களை நாவின் நுனியினால் உணரமுடிகிறது என்பதைக் கண்ட போது, மிகவும் மகிழ்ந்தார்! வேதாகமத்தை வாசிக்க ஒரு வழியைக் கண்டு கொண்டார்.

தேவனுடைய வார்த்தையைப் பெற்ற போது, எரேமியா தீர்க்கதரிசி சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைந்தார், யூதா ஜனங்கள் தேவனுடைய வார்த்தையைத் தள்ளிவிட்டதைப் போலல்லாமல் (எரே.8:9) எரேமியா, “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரே.15:16) என்கின்றார். எரேமியா கீழ்படிந்தார், அவருடைய வார்த்தைகளில் மகிழ்ச்சியடை ந்தார். ஆனாலும் அவருடைய கீழ்ப்படிதலின் நிமித்தம், தன்னுடைய சொந்த ஜனங்களாலேயே துன்புறுத்தப்பட்டார் (15:17).

நம்மில் சிலரும் இத்தகைய அநுபவங்களைச் சந்தித்திருக்கலாம். நாம் வேதாகமத்தை மகிழ்ச்சியோடு வாசிக்கின்றோம், ஆனால் தேவனுக்குக் கீழ்படியும் போது, துன்பங்களுக்கும், தள்ளிவிடுதலுக்கும் ஆளாகின்றோம். எரேமியாவைப் போன்று, நம்முடைய குழப்பங்களை தேவனிடம் கொண்டு வருவோம், தேவன் எரேமியாவிற்கு கொடுத்த வார்த்தையை மீண்டும் கூறி பதிலளிக்கின்றார். தேவன் அவரை தீர்க்கதரிசியாக அழைத்த போது கொடுத்த வார்த்தைகளை மீண்டும் கூறுகின்றார் (வச. 19:21; 1:18-19). தேவன் தன்னுடைய பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நினைவுபடுத்துகின்றார், நாமும் இந்த நம்பிக்கையோடு இருப்போம், அவர் உண்மையுள்ளவர், ஒரு போதும் நம்மைக் கைவிட மாட்டார்.

வைக்கோல் போர் ஜெபங்கள்

இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் அதிக ஜனங்களைத் தேவன் அனுப்பும்படி சாமுவேல் மில்ஸ் என்பவரும், அவருடைய நான்கு நண்பர்களும் அடிக்கடி கூடி ஜெபித்து வந்தனர். 1806ஆம் ஆண்டு, ஒரு நாள், அவர்கள் தங்கள் ஜெபத்தை முடித்து விட்டுத் திரும்பியபோது, ஒரு பெரிய புயல் காற்றில் அகப்பட்டனர். எனவே அவர்கள் ஒரு வைக்கோல் போர் அண்டை அடைக்கலமாயினர். அதிலிருந்து அவர்களுடைய வாராந்திர ஜெபக்கூடுகை “வைக்கோல் போர் ஜெபக்கூடுகை” என்றழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் உலகளவில் செயல்படும் ஓர் இயக்கமானது. இன்றும் இந்த வைக்கோல் போர் ஜெபக்குழுவின் நினைவுச் சின்னம் அமெரிக்காவில் வில்லியம்ஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நம் ஜெபத்தின் மூலம், தேவன் செயல்படக் கூடியதை அது நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. 

அவருடைய பிள்ளைகள் ஒரு பொதுவான நோக்கத்தோடு தன்னிடம் வரும்போது, நம்முடைய பரலோகத் தந்தை வெகுவாக மகிழ்ச்சியடைகின்றார். அது, ஒரு குறிப்பிட்ட பாரத்தை குடும்ப நபர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு, ஒரு மனதோடு குடும்ப ஜெபத்தில் வருவது போலவுள்ளது.

அதிகமான துன்பங்களைச் சந்தித்த காலத்தில், மற்றவர்களின் ஜெபத்தின் மூலம் தேவன் தனக்கு எப்படி உதவினார் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகின்றார். “அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார். அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும் பொருட்டு நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்” (2 கொரி. 1:10-11) தேவன் நம்முடைய ஜெபங்களை, சிறப்பாக நம்முடைய குழு ஜெபங்களை , இவ்வுலகில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றப் பயன் படுத்துகின்றார். 

நாம் அநேகராகக் கூடி ஜெபிக்கும் போது, தேவன் தரும் நன்மைகளுக்காக நாம் சேர்ந்து மகிழ்வோம். நம்முடைய அன்புத் தந்தை, நாம் அவரிடம் வரும்படி காத்திருக்கின்றார், ஏனெனில் நாம் நினையாத வழிகளில், நம்மூலம் அவர் கிரியை செய்ய முடியும்.

 

கண்ணுக்குத் தெரியாத உண்மைகள்

டிஸ்கவர் பத்திரிகையின் பதிப்பாசிரியரான ஸ்டீபன் காஸ், தன் அன்றாட வாழ்வில் நிலவுகிற கண்ணுக்குத் தெரியாத உண்மைகளை பற்றி சிந்திக்கத் தீர்மானித்தார். நியூ யார்க் நகரிலிருக்கும் தன் அலுவலகத்திற்கு நடந்துசென்றபோது, ‘ரேடியோ அலைகளைக் காணமுடிந்தால், பல்உருகாட்டி (கலைடோஸ்கோப்பு) ஜொலிப்பதுபோல இந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மேல்பகுதி ஜொலித்து, நியூயார்க்க நகரத்தையே ஒளிவெள்ளமாக்குவது தெரியும்’ என்று யோசித்தார். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில் ரேடியோ மற்றும் டிவி அன்டெனாக்கள் மொய்த்தவண்ணம் இருக்கும். ரேடியோ சமிக்ஞை, டிவி சமிக்ஞை, வைஃபை என தன்னைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்தவியல் புலம் இருந்ததை அவர் உணர்ந்திருந்தார்.

கண்ணுக்குத் தெரியாத ஓர் உண்மை பற்றி, எலிசாவின் வேலைக்காரனும்கூட ஒருநாள் காலையில் அறிந்து கொண்டான். காலையில் எழுந்து வந்தவன், சீரியாவின் படைகள் தன்னையும் தன் எஜமானையும் சுற்றி வளைத்திருப்பதைக் கண்டான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் போர்க்குதிரைகளில் ஏறியிருந்த வீரர்கள்தாம் தென்பட்டார்கள்! (2 இரா. 6:15). வேலைக்காரன் நடுங்கினான், ஆனால் எலிசா நம்பிக்கையோடு காணப்பட்டார். ஏனென்றால், தங்களைச் சுற்றிலும் தூதர்களுடைய சேனைகள் இருந்ததை அவர் கண்டார். “அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்று சொன்னார் (வச. 16). பிறகு, எதிரிகள் வளைக்கப்பட்டிருப்பதையும், எல்லாம் ஆண்டவரின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் தன் வேலைக்காரனும் பார்க்கும்படியாக அவனுடைய கண்களைத் திறக்கவேண்டுமென்று ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டார் (வச. 17).

முற்றிலும் முடங்கிப்போய், உதவியற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறீர்களா? எல்லாம் தேவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதையும், அவர் உங்களுக்காக யுத்தம் செய்வதையும் மறக்கவேண்டாம். “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்”
(சங். 91:11).